Thursday, June 14, 2012

நீ இன்னும் அழகாய்த்தான் இருக்கின்றாய்






இன்று போல் தான்
ஒரு மழை நாளில்
அன்று
நீயும் நானும் சந்தித்திருந்தோம்

வானம்
இருண்டு கிடந்தது
இடியின் ஓசை....
பறவைகளின் கீச்சொலி....
தவளைகளின் சத்தம்....
மரங்களில் காற்றொலி....
இவை எல்லாம் எனக்குப் பிடித்திருந்தது
உன்னைப் போலவே..


வான வெளியிலே தோன்றும்
ஒரு மின்னல் கீற்றென – பளிச்சென்று
நீ அழகாய் இருந்தாய்

நானும் அழகாய்த்தான் இருந்தேன்
ஆனாலும் அன்று
வானம் இருண்டு கிடந்தது
இன்றும் அப்படித்தான்

வானம் இருண்டு கிடக்கின்றது
அதே இடியின் ஓசை...
பறவைகளின் கீச்சொலி...
தவளைகளின் சத்தம்...
மரங்களில் காற்றொலி...
அப்படியேதான் இருக்கின்றது

நீ மட்டும் அருகில் இல்லை.
வானம் இருண்டு கிடக்கின்றது. – என்
வாழ்க்கை வானம் இருண்டு கிடக்கின்றது

நீ..............
இன்னும்.... இன்னும்.... இன்னும்....
அழகாய்த்தான் இருக்கின்றாய்
நானோ.....?



Thursday, June 7, 2012

மண்ணில் தஞ்சம்







நினைக்கின்ற நேரம் எல்லாம் - உன்
நினைவின்றி ஏதும் இல்லை - உனைக்
காதலித்த நாள் முதலாய் - என்னில்
உனக்கேனோ இரக்கமில்லை


வாழ்கின்ற காலம் எல்லாம் - நான்
உனக்காக வாழுகின்றேன்
எனைக் காண்கின்ற நேரம் எல்லாம் - நீ
எதற்காக ஓடுகின்றாய்

காண்கின்ற கனவில் எல்லாம் - என்றும்
நீதானே தோன்றுகின்றாய்
என் உயிர்விடும் மூச்சில் எல்லாம் - அன்பே
நீதானே வாழுகின்றாய்

பார்க்கின்ற பக்கம் எல்லாம்
தோன்றுவதோ உந்தன் விம்பம்
என்
காதலை ஏற்றுக்கொள்ள
உனக்கென்ன இந்த ஜம்பம்

போகின்ற இடங்களெல்லாம் - நான்
உனைத்தானே தேடுகின்றேன்
உனைப் பாராத பொழுதில் எல்லாம் - என் 
இதயம் வாடுகின்றேன்

மறுத்தாலும் வெறுத்தாலும் - நீ
என்றும் எந்தன் சொந்தம்
உன் காதல் இல்லை என்றால் - என்
உடல் மண்ணில் தஞ்சம்.







Sunday, June 3, 2012

பார்வைத் தீ







நேற்றுவரை
கல்லாய்த்தான் கிடந்தேன்
அகலிகை போல

அவள்......
உயிர் பெற்றெழுந்தாள்
இராமன் பாதம் பட்டதனால்

நானோ....
பற்றி எரிகின்றேன்
உன்
பார்வைத் தீ பட்டதனால்.

Tuesday, May 29, 2012

காதலித்துப் பார் கண்ணீர் வரும்





காதலித்துப் பார்.......!
கவிதைவரும் என்றார்கள்......
காதலித்தேன் - ஒரு
கன்னியை.... – வந்தது
கவிதை அல்ல
கண்ணீர்.



Wednesday, May 2, 2012

மாறுபாடு






நீ
குறிஞ்சிப்பூ
எப்போதாவது இருந்துவிட்டுத்தான்
மலர்வாய்
நானோ
கொத்தவரங்காய் - உன்
விழிவீச்சுத் தாங்கமுடியாமல்
தினம் தினம்
தள்ளாடிக்கொண்டிருக்கிறேன்

நீ வண்ண நிலவு
நான் அமாவாசை
நீ வரும்போது நான் இருப்பதில்லை
நான் இருக்கும்போதோ
நீயோ வருவதில்லை

நீ வெயில்
நான் பனி
நீ இருக்கும்போது நான் வருவதில்லை
நீ வந்தாலோ
நான் எங்கோ
காணாமல் போய்வடுகின்றேன்

நீ மின்னல்
நான் இடி
உன் நினைப்பு – என்
இதயத்தை உரசும்போதுதான்
நீ வருவதாகவும்
நான் இருப்பதாகவும்
உணர்ந்துகொள்கின்றேன்

ஆனால்............
நீ மின்னல்
பளிச்சென்று தெரிகின்றாய்
நானே......
வெறும் சப்தம்
உனக்கேனோ – என்றுமே
என்னைத் தெரிவதில்லை

Thursday, March 29, 2012

எப்போதும் எனக்குள்தான் நீ...





வழுக்குப்பாதையில்
எண்ணெய் பூசிக்கொண்டு
ஏற முயற்சி செய்யும்
முடவன் போல
மீண்டும் மீண்டும்
உன் நினைப்பில் நான்



உன்னை நினைக்கும்
ஒவ்வொரு கணப்பொழுதுகளிலும்
என் இதயத்தின் வழியே
ஒரு திராவகம் வழிந்தோடிய படியே


நீயோ

தொடமுடியாத தொலை தூரத்தில்
ஒரு புள்ளியாய்
நானோ
இங்கே சிறு பூச்சியமாய்

உலகமே ஒரு பூச்சியம் தானே
பூச்சியத்தில் தானே எல்லாமும் அடக்கம்
ஆதலால் இல்லை பாதகம்
எப்போதும்
எனக்குள்தான் நீ.


Sunday, March 11, 2012

அக்கினிக் குஞ்சுகள்




அனல் தகிக்கும்
பாலை வனத்தில் கூட
ஒருமுறையேனும்...
வெள்ளம் பாய்வதுண்டு

பிரிய சகி....
நீ உன்
நெஞ்சுக் கூட்டுக்குள்
அக்கினிக் குஞ்சுகளையா
அடைகாத்து வைத்திருக்கின்றாய்?

உன்னை
நினைக்கும் போதெல்லாம்
நான் வெந்து விடுகின்றேனே
உன்னை
நெருங்கும் போதெல்லாம்
பனிக்கட்டியாய் உருகிவிடுகின்றேனே

Thursday, March 8, 2012

என்னையும் ஏதாவது ஒன்றாய்...






உன்.....மின்னல் விழிகளின் வழியே
என் இதயத்தில்
இடியை இறக்கிய
ஆழகிய அரக்கி நீ...

அன்று நீ – என்
இதயத்தில் அறைந்த வார்த்தைகள்
எனக்கு வேதனை கொடுப்பினும்
இன்னும் என் மனதினில்
பசுமையான நினைவுகளாய்...

இருந்தும் என் மனதிற்குள்
ஏதேதோ ஆசைகள் பல...

உன் பூவிதழ்களில் தவழ்ந்திடும்
புன்னகையாய் இருக்கக்கூடாதா....... நான்?
உன் விழிகளை மூடும்.....
இமைகளாக இருக்கக்கூடாதா....... நான்?
உன் உடல்தனைத் தழுவிடும்
நூல் உடையென இருக்கக்கூடாதா....... நான்?

உன்னை காணதபோது – நான் என்
மனதிற்குள் எடுக்கும் உறுதியெல்லாம்
உன்னைப் பார்த்த மாத்திரத்தில்
தவிடு பொடியாய்...

தறி கெட்ட மனதிற்கு
தாள்பாள் போட்டா தடுத்துவிடமுடியும்?
என் மனமோ....... நித்தமும் அலைவதோ
உன் தாழ்கள் தேடித்தானே

அடியே!
என் மனதைச் சிதறடித்த
அழகிய அரக்கியே!

நீ..... தனியே எங்கும்
நடக்கும் போதெல்லாம் - என்
இதயம் துடியாய்த் துடிக்கிறது

இனியாவது...
என்னையும் உன்னோடு கூட்டிச்செல்
நீ போகும் இடம் எல்லாம்
கூடவே போட்டுச் செல்லும்
பாதணியைப் போல
என்னையும்.....
ஏதாவது ஒன்றாய்.






Friday, March 2, 2012

என் தாய்த்தமிழே...






வண்ணப்பட்டெதற்கு
அரிதாரம் தானெதற்கு----என்றும்
எம் ஜீவநதியான செம்மொழியே!
என் தாய்த்தமிழே!
சுந்தரத் தமிழழகே!

அன்னையவள் தாலாட்டினிலே
பாசத்தமிழ் - தவளும்
மழழைகளின் இதழ்களிலே
கொஞ்சும் தமிழ் - அவர்
கைவீசி நடக்கையிலே
பிஞ்சுத் தமிழ் - பள்ளியிலே
கல்வி பயில்கையிலே
அறிவுத்தமிழ் - பின்பு
பண்புடனே பழகையிலே
பண்புத் தமிழ் - நல்ல
மாண்பு மிக்க தோழமையில்
அன்புத் தமிழ் - இனிய
காதலெனும் சோலையிலே
கவிதைத் தமிழ் - இன்னும்
காதலரின் ஊடலிலே
கெஞ்சு தமிழ் - அவர்
ஊடல் விட்டு கூடயிலே
மஞ்சு தமிழ்
உலகில் உள்ள மொழிகள் எல்லாம்
விஞ்சு தமிழ்
கலைஞர்களின் நெஞ்சினிலே
மூன்று தமிழ்

பாவலரின் பாட்டினிலே
செந்தமிழர் வீட்டினிலே
தென்றலதின் ஓசையிலே
நின்றொலித்த இன்பத்தமிழ்

வீரம் விழைந்த தமிழ்
பள்ளு தமிழ்
அன்புத்தமிழ்
வம்புத்தமிழ்
நையாண்டி செய்த தமிழ்
கல்தோன்றா மண்தோன்றா
காலத்தே முன்தோன்றி
வாழ்வாங்கு வாழும் எங்கள்
மூத்த தமிழ்
அகிலம் எல்லாம் அதிரவைத்த
பொங்கு தமிழ்

முறம் எடுத்துப் புலி அடித்து
விரட்டிவைத்த தமிழ் மகளின்
வாயினிலே வந்துதித்த
மறத்தமிழே!
இன்று நீ.............

ஆடவரும் அரிவையரும்
நுனிநாக்கில் அரிவாள் எடுக்க
உயிர் துடிக்க உளம் கொதிக்க
குற்றுயிராய்ப் போன தமிழ்
அரைகுறையாய்த் தேய்ந்த தமிழ்
'தமிங்கலமாய்' ஆன தமிழ்

'மெல்லத் தமிழ் இனிச் சாகும்'
என்று கூறிவைத்த
பாரதி சொல் பொய்க்குமா?
இல்லை......
என் தாய்த்தமிழ் தான்
மாய்க்குமோ?
யாரறிவார் இன்று?

Friday, January 20, 2012

தேரோடு வந்த தேவதை...




காதலீ...........

அந்தத் தேர்த்திருவிழாவில்
உன்னையும் தேரையும் - என்னால்
அடையாளம் கண்டுகொள்ளவே
முடியவில்லையடி

ஆனாலும்
உன் சலங்கைச் சத்தம்தான்
அடையாளம் காட்டியது.
உன்னை எனக்கு

பின்னே.....
எந்த தேர் தான்
சலங்கை கட்டி  உலாவரும்?

சகி!
அன்று போலவே
இன்னுமொரு முறை
என் முன் பவனி வா!
இல்லை........கனவுகளிலாவது
அப்படி வந்து போ

சே!
எப்படி முடியும்?
கண்கள் தூங்கினால்தானே
கனவுகள் வருவதற்கு
இவன் தான் 
தூக்கத்தைத் தொலைத்தவன் ஆயிற்றே

பரவாயில்லை
அணுவிலும் சிறிய கருவையும்
பிரிக்கும் சக்தி கொண்டவளே
என் திறந்த விழிகளுக்குள்ளே
அப்படியே வந்து உலாவு
தற்காலிக மகிழ்ச்சியாவது
என் மனம் கொண்டாடட்டும்